பொங்கல் வரலாறு/Pongal history

பொங்கல் பண்டிகை தை 1-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 முதல் 18 வரை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சளைத் தைமாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியை (பச்சரிசி) கொண்டு பால், சர்க்கரை/வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புது பானை & புது அடுப்பில் கொதிக்க விட்டு பொங்கும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரியபகவானுக்கு, மாட்டுக்கும் படைத்தது நாமும் பகிர்ந்து உண்ணுவதே பொங்கல் விழாவின் தனிச்சிறப்பாகும்.

பொங்கல் படையலில் முக்கியமாக மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், கொடி வழிக் காய்கறி வகைகள் சேர்க்கப்படும். பச்சை நெற்களை அரைத்து தவிடு நீக்காமல் தண்ணீர் சேர்த்து வைக்கப்படும் பருப்புக் குழம்புடன் படையலிடுவதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் பொங்கலன்று தமிழர்கள் அனைவரும் சைவ வகை உணவுகளையே உண்கின்றனர்.

தைப்பொங்கல் விழாவானது தமிழர்களின் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை இந்துக்கள் மட்டுமல்லாமல் தமிழ் கிருத்துவர்கள், தமிழ் இஸ்லாமியர்களும் சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையை உணர்த்துகிறது.

பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?

பொங்கல் என்பது தமிழர்களால் “தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும்” ஒரு தனிப்பெரும் விழா தைப்பொங்கல். இந்த பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக உலகம் முழுதுமுள்ள தமிழர்களால் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு) கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் தேவனாகிய கதிரவனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றிசெலுத்தும் விதமாக சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உழவர் திருநாள்:

உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் உழைப்பிற்கு உதவிகரமாக விளங்கிய கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாகவே தைப்பொங்கல் விழா உழவர் திருநாளாக கருதப்படுகிறது. தைப்பொங்கல் நான்கு நாள் விழாவாக உலகிலுள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது:

போகி பண்டிகை:

போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் காப்புக்கட்டுதல் / பூலாப்பூ செருகி வைப்பர்.

தைப்பொங்கல்: தைப்பொங்கல் தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழியும் தமிழர்களால் இன்றுவரை நம்பப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்:

மாட்டுப்பொங்கல் தைமாதம் 2-ம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும். உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் “ஆ“வினத்திற்கு நன்றி செலுத்தும் விதமாகவே மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்:

காணும் பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் (முக்கியமாக தமிழ்நாட்டில்) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் உறவினர்களின் வீட்டிற்குச்சென்று தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வர்.