அங்கோர்வாட் கோவில் மர்மம் மற்றும் வரலாறு தமிழில்

Spread the love

அங்கோர் வாட் (Angkor Wat) என்பது , அங்கோர், கம்போடியாவின் நாட்டின் உள்ள இந்துக்கோவிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோவிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த உலகிலேயே மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அமைந்துள்ளது. இது  இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (தற்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள மர்மம் என்னவென்றால் சூரியவர்மனின் அஸ்தி (சாம்பல்) இன்றும் காணப்படுகின்றது என்று  கம்போடியா நாட்டு மக்கள் கருதுகின்றனர். இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  அப்போது உள்ள அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அதென்ன அங்கோர் வாட், பெயரை வித்தியாசமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அங்கோர்வாட் என்பது கெமர் மொழிச்சொல். அங்கோர் என்ற நகரம் என்றும் வாட் என்றால் கோயில் என்றும் பொருள். அதாவது கோயில் நகரம் என்று அதை பொருள் கொள்ளலாம். இது கெமீர் மொழிச் சொல்லாகும்.

வரலாறு

அரசர் இரண்டாம் சூரியவர்மன், அங்கோர் வாட்டை கட்டியவர்
அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோவிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோவில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோவில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோவில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோவிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்தது.

மேற்கத்திய பார்வையாளர்கள் இக்கோயில் கெமர் மக்களால் கட்டப்பட்டது என்பதை நம்ப இயலாமல் இக்கோவில் உரோம சகாப்தத்தின் போதே கட்டப்பட்டது எனத் தவறாக தெரிவித்தனர். ஆனால், அக்கோவிலைப் புதுப்பித்த போது மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டுகளின் ஆய்வில் முடிவில் அது மற்ற அங்கோர்களிருந்து தனித்து இருப்பதை உணர்ந்தனர். 20ஆம் நூற்றாண்டின் போது தொடங்கப்பட்ட புதுப்பித்தல் பணி, உள்நாட்டுப் போர் மற்றும் 1970, 1980களின் கெமர் ரூச்சின் ஆட்சியினால் நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற அங்கோரியன் சிலை திருட்டு மற்றும் சேதத்தை ஒப்பிடும் போது அங்கோர் வாட்டின் சேதம் குறைவே.

இன்றைய அங்கோர் வாட்

1982 மற்றும் 1992ன் மத்தியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலின் புதுப்பித்தல் பணியினை செய்தது. அப்போதிலிருந்து இக்கோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் இதைப் பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் அப்சரா பாதுகாப்பு திட்டம், இக்கோயிலின் அலங்காரத்தையும், கட்டமைப்பையும் பேணும் தேவதாக்களைப் பாதுகாத்து வருகிறது.

உலக நினைவிடங்கள் நிதியம், 2008ல் பாற்கடல் கூடத்தை பல ஆய்வுகளுக்கு பின்னர் புதுப்பிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது, இப்பணியின் முக்கிய கட்டம் 2012ல் முடிவடைந்தது, இறுதிக் கட்டமாக முக்கோண வடிவிலான அலங்கார கும்பம் 2013ல் நிறுவப்படும் எனத் தெரிகிறது.

2004 மற்றும் 2005ல், கம்போடிய அரசாங்க புள்ளிவிவரங்களின் படி முறையே, 561,000 மற்றும் 677,000 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக கம்போடியாவுக்கு வருகை புரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வர்த்தகம் இக்கோயிலைப் பாதுகாக்க பெரும் அளவில் உதவியது. ஆனால் அதிக அளவு பார்வையாளர்களின் வரவால் இக்கோயிலின் சுற்று வட்டாரம் மாசு பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதைக் கட்டுப்படுத்த யுனெஸ்கோவும் அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து அதனைப் பாதுகாக்க முடிவு கொண்டது.

மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு.

நவீன காலத்திய அங்கோர் வாட் மறுசீரமைப்பும் பாதுகாப்பும், பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் என்ற பிரான்சுநாட்டு அமைப்பு மேற்கொண்டது. இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முதன்மையாக தள ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்டிருந்தன. 1970களின் முற்பகுதி வரை அங்கோர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அதன் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அங்கோர் வாட் பாதுகாப்பு மையம் பொறுப்பு வகித்தது. 1970களின் முற்பகுதிவரை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1960களில் அங்கோர்வாட்டின் பெரும்பான்மையான புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  கெமர் ரூச் ஆட்சிக்காலத்தில் இப்பணிகள் கைவிடப்பட்டன. அங்கோர்வாட் பாதுகாப்பு மையம் கலைக்கப்பட்டது. 1986-க்கும் 1992-க்கும் இடையில் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கோவில் மீது மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டது, அந்த நேரத்தில் கம்போடிய அரசாங்கத்தை பிரான்சு அங்கீகரிக்கவில்லை. தொடக்கக்கால பிரெஞ்சு மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் குறிப்பாக இந்தியா மேற்கொண்ட புதுப்பித்தல் வேலைகள் ஆகியவற்றைப் பற்றி விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, இப்பணிகளில் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களும் சிமெண்ட்டும் கற்களின் மேற்பரப்பில் சேதத்தை ஏற்படுத்தியது என்ற ஐயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

1992 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மன்னர் நொரடோம் சீயனூக், உதவியால் அங்கோர் வாட் யுனெசுகோவின் உலகளாவிய அபாயநிலையில் உள்ள உலகளாவிய மரபுச்சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றது. (2004 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது) அங்கோரை காப்பாற்றுவதற்காக சர்வதேச சமூகத்திற்கு யுனெசுகோ மூலம் முறையிடப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் அங்கோர் தளத்தை பாதுகாப்பதற்காக ஒரு மண்டலம் அமைக்கப்பட்டது. அங்கோர் மற்றும் சீயெம் ரீப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம அப்சரா என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கம்போடிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமும் 1996இல் உருவாக்கப்பட்டது. பிரான்சு, சப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் தற்போது பலவகையான அங்கோர் வாட் பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *